Sunday 9 September 2012

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் !

நம் இந்திய தேசத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகளிடம், நீ பிற்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய்? என்ற கேள்வியை கேட்டால் அதிகமானவர்கள் சொல்லும் பதில் 'நான் ஐ.ஏ.எஸ், ஆவேன், ஐ.பி.எஸ் ஆவேன்' என்பது தான்.

அதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இத்தேர்வை குறிக்கோளாக கொண்டு, சிறு வயதிலிருந்தே முயற்சி செய்தால் வெற்றி பெறுவது மிகச் சுலபம். அதற்கான சில வழிமுறைகளை நாம் இப்பொழுதே கடைபிடிக்க முயல வேண்டும்.




வழி 1: முதலில், நம்முடைய ஐ.ஏ.எஸ்.,கனவிற்கு உயிர் கொடுப்போம் என்ற எண்ணமும், தாகமும் உங்கள் மனதில் தோன்ற வேண்டும். "நான் ஐ.ஏ.எஸ்.,ஆவேன். இந்த நொடியிலிருந்து அதற்காக உழைப்பேன்' இந்த மந்திரத்தை உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் உச்சரிக்க வேண்டும். இதை உறுதி செய்துவிட்டு பின் வரும் வழிகளை படியுங்கள்.

வழி 2:  நீங்கள் எழுதக்கூடிய ஐ.ஏ.எஸ்.,தேர்வை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். இத்தேர்வில் பல கட்டங்கள் உள்ளன. செயல்திறன் தேர்வு (ஆப்டிடியூட்), முதற்நிலைத் தேர்வு (மெயின்), நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும். முந்தைய வருடங்களில் நடந்த தேர்வுகள், அவற்றில் கேட்கப் பட்ட வினாக்கள் போன்றவற்றை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ளுங்கள். இவை பற்றிய விவரங்களுக்கு http://www.csat.co/ என்ற இணையதளத்தை பாருங்கள்.

வழி 3: தினமும் ஆங்கில நாளிதழ்கள், புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இந்திய அரசின் வெளியீடான "இந்தியா இயர் புக் 2010'  ("India Year Book  2010') என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். இப்புத்தகத்தில் இந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். இது உங்களுடைய செயல்திறன் தேர்விற்கு உதவியாக இருக்கும்.

வழி 4: நன்கு பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்சியளிப்பு நிறுவனத்தை (கோச்சிங் சென்டர்) தேர்வு செய்யுங்கள். அத்தகைய நிறுவனங்களில் பயில்வதன் மூலம், சுருக்கமாக கணிதத்திற்கு விடை சொல்லும் விதம், ஆங்கில நுணுக்கங்கள் போன்றவற்றை அறியலாம். அவர்கள் தரும் புத்தகங்கள் நமக்கு தற்போதைய நிகழ்வுகளை அறிய பயன்படும். சில நிறுவனங்கள் பல முறை செயல்திறன் தேர்வுகளை அங்கு படிக்கும் மாணவர்களுக்கு நடத்துகின்றனர். இதன் மூலம் அந்த தேர்வின் மீது உள்ள பயம் விலகும்.

வழி 5: திட்டமிட்டு படிக்க வேண்டும். செயல்திறன் தேர்விற்கு படிக்கும் போதே முதன்மைத்தேர்விற்கு தேர்வு செய்த பாடத்தை படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் தேர்வு நாள் நெருங்கும் போது நீங்கள் அனைத்து பாடங்களையும் முடித்த திருப்தி இருக்கும்.

வழி 6: நீங்கள் செயல்திறன் தேர்வில் வெற்றி பெற்றவுடன் படிப்பதை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் தான் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற முடியும். ஏனென்றால், செயல்திறன் தேர்வை காட்டிலும், முதன்மைத் தேர்வு போட்டிகள் நிறைந்ததாகவும், இருமடங்கு கடினமாகவும் இருக்கும். அதில் வெற்றி பெற்ற பின் நேர்முகத் தேர்விற்கு உங்களை தயார் செய்ய வேண்டும்.

வழி 7: ஐ.ஏ.எஸ்.,தேர்விற்கு தயாராவது என்பது ஒரு நெடும் பயணம். அதில் பல இன்னல்கள் ஏற்படும். ஏனென்றால், படிக்கும் பாடத்திட்டத்தின் அளவு மிகவும் அதிகம். அனைத்து இன்னல் களையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற மனதை தயார் செய்யுங்கள். தேர்வை மகிழ்ச்சியாகவும், குழப்பமில்லாமலும், தெளிவாகவும் எதிர்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment